Saturday, April 25, 2009

சிவிலியன்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ‐ இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு


சிவிலியன்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ‐ அமெரிக்கா: வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகளின் போது சிவிலியன்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான இழப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் வெளியேறுவதற்கு உகந்த வகையில் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது. யுத்தம் காரணமாக பாரிய பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவலியன்கள் தொடர்பில் வொஷிங்டன் அதிக கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அப்பாவிச் சிவிலியன்களது உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் உடனடியாக யுத்தத்தை கைவிட்டு சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஒபாமா அரசாங்கம் கோரியுள்ளது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, பிரித்தானியா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊடகவயிலாளர்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கு செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் ‐ அமெரிக்கா
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்தியா அரசாங்கம் மேற்கொண்டு முனைப்புக்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கிய உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கி அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பே மிகவும் முதன்மையானதென அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்லாயிரக் கணக்கான சிவிலியன்கள் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ள போதிலும், பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர் ஓ பிளெக் ஆகியோர் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளுடன் இலங்கை நிலவரம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இணைத் தலைமை நாடுகள், ஜீ‐8 நாடுகள் ஆகியன இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவிச் சிவிலியன்களை மனித கேடயமாக தமிழீழ விடுதலைப் பயன்படுத்தக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களை களைந்து மூன்றாம் தரப்பினரிடம் புலிகள் சரணடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment