Thursday, April 23, 2009

இலங்கை பிரச்சனை: பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா!



இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் திரைப்பட வர்த்தகசபை (சென்னை பிலிம் சேம்பர்) வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர், இலக்கியவாதிகள், ஓவியர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோர் பேசினர். கூட்ட முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசினார். அப்போது, அவர் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த பத்மஸ்ரீ விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார் பாரதிராஜா.

No comments:

Post a Comment