Thursday, April 23, 2009

இலங்கை அகதி முகாம்கள் சர்வதேச தரத்திற்கு அமையப் பேணப்பட வேண்டும் ‐ அவுஸ்திரேலியா:


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சமடைந்துள்ள அப்பாவிச் சிவிலியன்கள் தங்கியிருக்கும் முகாம்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பேணப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அகதி முகாம்களை கண்காணிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை கௌவரப்படுத்தும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நீண்டகால சுபீட்சத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெற்று வரும் பிரதேசத்தில் தங்கியுள்ள சிவிலியன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிஸ்டவசமாக, பெரும் எண்ணிக்கையிலான அப்பாவிச் சிவிலியன்களது உயிர் யுத்தத்தினால் காவு கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோதல் தவிர்ப்பு வலயம் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் எறிகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாவிச் சிவிலியன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் யுத்த நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு நியாயம் வழங்கக் கூடிய வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது மிகவும் இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:

Post a Comment